/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, May 13, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணினித்தமிழ் உரை


தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 10
13.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, அண்ணா பல்கலைக்கழக முதுநிலை ஆய்வாளர் முனைவர் பட்டாபி ஆர் கே ராவ் அவர்கள் “தகவல் மீட்டெடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், தகவலை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் தகவலைத் தேடிக்கண்டறிதலின் செயல்முறைகளைத் துறைசார்ந்த நுட்ப அறிவுடன் எடுத்தியம்பினார்.

தகவல் மீட்டெடுப்பு (Information Retrieval) என்பது தகவல்களைப்
பல்வேறு சான்றுகளிலிருந்து திரட்டித் தேவைக்கு ஏற்ப வகைப்படுத்தி வழங்குதல் என்றும் தகவல் கண்டுபிடிப்பு (Information Extraction) என்பது தேடப்படும் சொல் வடிவங்களில் பொதிந்திருக்கின்ற மொழியியல் கூறுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தித் தருதல் என்றும் விளக்கியுரைத்தார்.
தகவல் மீட்டெடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் உட்கட்டமைப்புகள், இரண்டிற்குமான ஒருமைப்பாடு மற்றும் வேறுபாடுகள், திறவுநிலைத் தேடுபொறிகள் (Open Source IR Engines) உருவாக்கப் பயன்படும் நட்ச் (Nutch), சோலர் (Solr) என்னும் மென்பொருள்கள் குறித்து விளக்கினார்.
இந்திய நடுவணரசிற்காக (Indian Search Engines) அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள searchko (http://www.searchko.co.in/), sandhan (http://sandhan.tdil-dc.gov.in/) என்னும் தேடுபொறிகளில் தமிழ்மொழி செயலாற்றும் பின்னணியை எடுத்துரைத்தார்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ள நிகழாய்வித் திட்டம் குறித்தும் அதன் நிரலாக்க நெறிமுறைகள் குறித்தும் நுட்பமாகப் புலப்படுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினி மொழியியல் ஆராய்ச்சிக் குழுவின் (Computational Linguistics Research Group) பணிகள், திட்டங்கள், மொழிசார் ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வுதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 comments: