/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, February 26, 2017

புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்

|3 comments





பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

 27/02/2017 அன்று ஒருநாள் தமிழ்த்துறையில்
“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிற்சர்லாந்து.




27-02-2017 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9 தமிழ்த்துறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழா இனிதே காலை 10 மணிக்குத் தொடங்கியது.
விழாவில் தொடக்கமாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  வந்திருந்த விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேரா.அய்யம்பிள்ளை தலைமயுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினாரக கலந்துகொண்ட  சுவிஸ்ர்லாந்து நாட்டைச் சேர்ந்த  சூரிச் மாநில மாநில கலாச்சார ஒருங்கிணைப்பாளர் திருமதி மதிவதினி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்என்ற தலைப்பில் சிறப்புக் கருத்துரை வழங்கினார். அதில்



 மதிவதினி உரை





உலக நாடுகளை ஆசிய நாடு ஐரோப்பிய நாடு என்று பிரிவுபடுத்தி பேசிய காலங்கள் மாற்றமடைந்து "புலம்பெயர்ந்த நாடுகள்"என்றவொரு நாடு தனக்கான இடத்தை உலகநாடுகளின் மையத்தில் தக்கவைத்துள்ளது.
புலம்பெயர்தல் என்பது 18 -19 ஆம் நூற்றாண்டுகளில் புலம்பலுடனே ஆரம்பித்துவிட்டது எனலாம்.
ஆரம்பகாலங்களில் தமது வாழ்வாதார அடிப்படை வசதியை மேம்படுத்துவதற்காக கூழித்தொழிலாளியாக இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து எண்ணற்ற தமிழர்கள் தமது தாய் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தனர்.
அதனைத்தொடர்ந்து 1980 இல் இருந்து இந்த நிமிடம் வரையில் இடம்பெறுகின்ற புலம்பெயர்வுகள் உயிரை தக்கவைப்பதற்கானப் புலம்பெயர்வாக உள்ளதென சமூக ஆய்வாளர்கள் கருத்துக்கணிப்பு செய்துள்ளனர்.
தமது தாயக மண்ணின் வாசத்தையும் உறவுகளின் சுவாசத்தையும் தொலைத்து புலம்பெயர்ந்த மக்கள் தமது அடையாளமான மொழி கலைகலாச்சார விழுமியப்பண்பாடுகளைத் தமது புலம்பெயர்ந்த நாடுகளில் இழக்கவோ அல்லது இருட்டடிப்பு செய்யவோ இன்றுவரை எத்தணிக்கவில்லை.மாறாக அடையாளப்படுத்துவதற்கான போராட்டத்தில் முனைப்பாக இயங்கத்தொடங்கினர்.
இதற்கான ஊடகமாக "வாழ்வியல் நாட்டின் மொழியே "ஊடகமாக செயல்பட முடியுமென ஊகித்த தமிழர்கள் தமது வாழ்வியல் நாட்டு மொழியில் சிறப்புற்று அவற்றின் ஊடாக தமது செம்மொழியாம் தமிழ்மொழிக்குரிய அங்கீகாரத்தை உலக நாடுகளில் நிலைநாட்டி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
முதல்கட்ட வேலைத்திட்டமாக தமது புலம்பெயர் நாடுகளில் தமிழ்பள்ளியை நிறுவத்தொடங்கினர்.தமது வருவாயில் ஒருபகுதியை ஒதுக்கி தமிழ் சங்கங்கள் நிறுவி அதனூடாக தமது தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுக்கொடுக்கத்தொடங்கினர்.
இச்சங்களின் பணிகள் நாளடைவில் மொழியோடு நின்றுவிடாது தமிழரின் கலைகலாச்சார பண்பாடுகளைக் கட்டியெழுப்புவதாக அமைந்தது.
மொழியை கற்க முனைந்த தமிழ் சிறார்கள் நாளடைவில் முத்தமிழையும் பயிலத்தொடங்கினர்.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மொழி அண்மைக்காலமாக ஆலமரம் போல கிளைகள் பரப்பி பன்னாட்டு உறவுகளுக்கிடையே உறவுப்பாலத்தை வலுவடையச்செய்துள்ளது.உலக நாடுகளில் வாழ்கின்ற பல்லினத்தவரும் தமிழன் என்றொரு இனத்தின் அடையாளத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கிவருகின்றனர்.சுவிற்சர்
லாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு மொழியாக தமிழ்மொழி பள்ளி மட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரச பாடசாலைகளில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மூன்று மணிநேரம் தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. மேலும் தமிழ்பள்ளியில் நடைபெறும் வருடாந்த இறுதிப்பரிட்சைப் புள்ளிகள் சுவிற்சர்லாந்து அரசபாடசலையின் பெறுபேறு அட்டையில் பதிவுசெய்யப்படுகிறது.
அமெரிக்கா,கனடா,இலண்டன்,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தமிழுக்கான அங்கீகாரம் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளது என்பதனைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பாடமாக அங்கீகாரம் பெற்றதை இந்த இடத்தில் குறிப்பிடுவது சிறப்பு என கருதுகின்றேன்.
மேலும் சங்கம் வைத்து தமிழ்வளர்த்த புலம்பெயர் நாடுகளில் தமிழ்கல்விப்பணிமனைகளாக விரிவாக்கம் பெற்றதோடு வாழ்வியல் நாட்டு அரச பாடசாலை ஆசிரியர்களிடமும் "தமிழ் "என்ற மொழி குறித்து விழிப்புணர்வை உண்டு பன்னியுள்ளது எனலாம்.
தமிழ் பள்ளி மட்டங்களில் நடைபெறும் ஆண்டு விழாக்கள், கலைவிழாக்கள், நாட்டிய மயில் ,இசைக்குயில் போன்ற நிகழ்வுகள் மாணவர்களைக் கேட்டல் ,பேசுதல், படித்தல் எழுதுதல் என்ற திறன்களில் வளர்ச்சியடையச் செய்துள்ளதுடன் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களும் மேன்மையடைந்து வருகிறது எனலாம்.
"கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதை தமிழன் மறக்கவில்லை என்பதற்குச் சான்றாகப் பல புலம்பெயர் மாநிலங்களில் கோயில்கள் கோபுரங்களுடன் வான் உயரந்து சாட்சியப்படுத்துகிறது தமிழனை.
கோயில் திருவிழாக்கள் குடமுழுக்கு விழா ,அன்னதானம் போன்ற நிகழ்வில் எண்ணற்ற தமிழர்கள் இன்றுவரை கலந்து தமக்கான உறவுப்காலத்தை வலுவடையச் செய்து வருகின்றனர்.
அத்துடன் கோயிலை அண்டி திருக்குறள் போட்டி,தேவார திருவாசகம் போட்டி ,பேச்சுப்போட்டி போன்றவையும் காலத்துக்கு காலம் தேவைகருதி நடாத்தப்படுகிறது.
இதனால் தமது இரண்டாம் தலைமுறையினர் தமது அடையாளத்தை ஆளுமையுடன் வெளிப்படுத்வேண்டுமே அன்றி தமிழன் என்ற அடையாளம் வெட்கப்படவேண்டிய ஒன்றல்ல என்ற உளவியல் நோக்கில் சிந்திக்க வாய்பளிக்கப்படுகிறது .
தமது வேற்று கலாச்சார மொழி நண்பர்களும் தமது உணவை ,உடையை ,கலையை இரசிப்பதை இரண்டாம் தலைமைறையினர் பெருமையாக கருதுகின்றனர்.இதனால் இந்தியா மற்றும் ஈழம் போன்ற தமிழர்களின் தாயகப்பூமியின் வாசம் வேற்று நாட்டவர்களையும் ஈர்க்கின்றது என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் தலைமுறையினர் தமது தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வியை கற்கச் செல்கையில் தமது தாய்மொழியை கற்க வேண்டுமென சிந்திக்கின்றனர்.காரணம் புலம்பெயர் நாடுகள் ஒவ்வொன்றிலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றனர்.அவர்களது தேவைகளும் எண்ணற்றவை .இவ்வேளையில் இவர்கள் குறித்த விடையங்களை தெளிவுற தாய்மொழியாம் தமிழ் மட்டுமே சிறப்பானதாக அமையும்.மூலமொழி மட்டுமே உண்மைத்தன்மையை உள்ளபடி நயத்துடன் சிதைக்காது உணர்விக்கும்.மொழிபெயர்ப்பு,சட்டம்,வைத்தியம்,தமிழில் கணனி இவ்வாறான துறைகளை நாடிச்செல்லும் மாணவர்கள் தமிழைக் கற்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மொழி தரமான ஆசிரியர்களால் மாணவர்களின் நேரவசதிக்கேற்ப கற்பிக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு பயிற்சிகள் ஆசிரியர்களுக்குப் புலம்பெயர் வாழ்வியலை கருத்தில் கொண்டு நடாத்தப்படுகினது.
குறிப்பாக எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சுவிஸ், தென்ஆபிரிக்கா ,போன்ற நாடுகளில் அயலக ஆசிரியப்பட்டயப்படிப்பு என்னும் சான்றிதழ் கல்வியை நடாத்திவருகின்றது.
இன்று தமிழ் மொழியின் அருமை பெருமைகள் பிறந்தகத்தில் ஓரங்கட்டப்பட்டு ஏளனமாக பார்க்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்கள் வேற்று இனத்தவரையும் ஆய்வு செய்யச் தூண்டும் மொழியாகத் தமிழை அடையாளப்படுத்தி வருவது நமக்கெல்லாம் பெருமையே. என்று தமது உரையில் புலம்பெயர்ந்த வாழ்வியலையும் தமிழ் மொழியின் பெருமையையும் விரிவாக வழங்கினார்.

 மாணவ மாணவிகளோடு கலந்துரையாடல் நிகழ்வு நடைபேற்றது.

இறுதியாக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பொ.அன்பானந்தன் நன்றி கூறினார்.




Friday, February 10, 2017

தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்

|2 comments

தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், நவலூர்குட்டப்பட்டுவில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 17-2-2017 அன்று நடத்தும் ”தமிழ் இணையப் பயன்பாடுகள் - பயிலரங்கம்” நிகழ்வில்  முனைவர் துரை. மணிகண்டன் “இணையத் தமிழ் அறிமுகம்” எனும் தலைப்பிலும், தேனி மு.சுப்பிரமணி ”மின்னஞ்சலும் மின்குழுமங்களும்” எனும் தலைப்பிலும், நண்பர் செல்வமுரளி “தமிழ்க் குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள்” எனும் தலைப்பிலும் பயிற்சியளிக்க இருக்கிறார்கள்..



நிகழ்வின் தொடக்கமாகப் பேரா.கண்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்துக் கல்லூரி முதல்வர் பேரா.அய்யம்பிள்ளைத் தலைமையுரை வழங்கினார்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் பேரா..அலிபாவா தொடக்க உரை வழங்கினார். தொடக்கவுரையில் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்பத் தமிழைத் தொழில் நுட்பத்தின்  அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இந்தப் பயிலரங்கம் அமையும் என்றார்.
முனைவர் துரை.மணிகண்டன்
  தலைப்பு: இணையத்தில் அறிமுகம்
இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் இணையம் முதன்முதலில் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக 1969 இல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதன் வளர்ச்சி 1972, 73 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவைவிட்டு இங்கிலாந்து, நார்வே நாடுகளில்  பயன்படுத்தப்பட்டு வந்தன.   பின்பு படிப்படியாக உலகில் பல்வேறு நாடுகளுக்கு இணைய இணைப்பு கிடைத்துள்ளது. பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தபட்டு வந்த இணையம் இன்று பல்வேறு வகையான ஏன்  நாம் நினைத்துப் பார்க்க இயலாத பணிகளைச் செய்யும் தகவல் ஊடகமாக  வளர்ந்து நிற்கின்றன.
வலைப்பின்னல்:
இணையம் என்பது உலகில் பயன்படுத்தப்படும் கணிப்பொறி, அலைபேசி, தட்டைக்கணினி அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவையாகும். இதில் கணினிகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், படங்கள், ஆகியவற்றைப் பொதுவான கணினிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதே வலைப்பின்னல் என்பதாகும்.
இந்த வலைப்பின்னல் வழியாக இணையம் இந்தியாவில் குறிப்பாகத் தமிழில் சிங்கப்பூரைச் சார்ந்த முனைவர் நா.கோவிந்தசாமி அவர்களால் 1995 ஆம் ஆண்டு,சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் முன்னிலையில் தமிழ் இணையத்தில் வலையேற்றம் பெற்றுள்ளது. இது நாளடைவில் வளர்ந்து இன்று பல்வேறு தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் மின்குழுமங்கள், தமிழ் விக்கிப்பீடியா தமிழின் பரப்பு விரிந்துள்ளது.
இன்றைய அடிப்படைத் தேவையாகத் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தத் தேவையான சில குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் முதன் முதலாகத் தமிழில் தட்டச்சுப் பயிற்சியைப் பேராசிரியர்களுக்கு வழங்கினார். அடுத்துத் தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள் மற்றும் நூலகம் சார்ந்த இணையப்பக்கங்களைப் பார்வையிட்டு எவ்வாறு தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கி ஒவ்வொருவரும் பயன்படுத்த முடியும் என்ற பயிற்சியை வழங்கினார். அடுத்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் அவரவர்களுக்குத் தெரிந்த இலக்கிய வரலாற்று நிகழ்வை எவ்வாறு பதிவு செய்வது என்ற பயிற்சியையும் வழங்கினார். இணையத்தமிழ் மூலம் புதிய இலக்கிய ஆய்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
மேலும் தமிழில் சொற்பிழைத்திருத்தி சந்திப்பிழைத்திருத்தியின் பயன்பாடுகளையும் அதனைப் பயன்படுத்தும் முறையையும்  எடுத்து விளக்கினார். எழுத்துரையைப் பேச்சுரையாகவும், பேச்சுரையை எழுத்துரையாகவும் மாற்றும், மொழிபெயர்ப்பு மென்பொருள்களும் தமிழில்  உருவாக்கப்பட வேண்டும்.
இறுதியாக இணையக் (கணினித்) தமிழ் துறை மேலும் வளரவேண்டுமென்றால் பல்வேறு வகையான தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்குக் கணிப்பொறித்துறை, தமிழ்த்துறை, மொழியியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப நண்பர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
தேனி மு. சுப்பிரமணி -
தலைப்பு:மின்னஞ்சலும் மின் குழுக்களும்
இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளும் மின் ஆட்சிக்கு மாற்றமாகி வருகின்றன. இதற்கு அலைபேசி எண்ணும், மின்னஞ்சலும் அவசியமாகி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடியப் பயன்பாட்டிலுள்ள மின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை 4337 மில்லியன்கள் என்று இருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 16% அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 192.2 பில்லியன் மின்னஞ்சல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு மின்னஞ்சல் மூலம் 25 எம்.பி அளவிலான படம், கோப்புகளையும் இணைத்து அனுப்பி வைக்க முடிகிறது. மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரிப்புக்குப் பின்னர், சாதாரண அஞ்சல் எனும் கடிதப் போக்குவரத்து குறைந்து போயிருக்கிறது. முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்குவதற்கும் மின்னஞ்சல் அவசியமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையை இலவசமாக வழங்கி வருகின்றன. இந்த மின்னஞ்சல் சேவை நிறுவனங்களின் தள முகவரியுடன் சேர்த்து நாம் விரும்பும் பெயர்களில் மின்னஞ்சல் முகவரியைப் பெற முடிகிறது. மின்னஞ்சல் சேவை அமைப்பின் தள முகவரி இல்லாமல், தொழில், இசை, நாடு, தொழில்நுட்பம், ஆன்மிகம் போன்ற 200 வகையான பெயர்களிலும் மின்னஞ்சல் முகவரியினைப் பெற முடியும்.
இது போல், மிக நீளமான பெயரில் அல்லது மிகக் குறைவான பெயரில் மின்னஞ்சல் முகவரிகளையும் பெற முடியும். இது போல் 10 நிமிடங்கள், ஒரு மணி நேரம், ஒரு நாள் பயன்பாட்டிற்கான தற்காலிக மின்னஞ்சல் முகவரியையும் பெறலாம். அதிக அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரியையும் பெற முடியும். தமிழ் மொழியிலும் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் தமிழ் மின்னஞ்சல் முகவரியினைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன
மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பவர்கள், மின் குழுக்களாக இணைந்து செயல்பட முடியும். கூகுள், யாகூ போன்ற நிறுவனங்கள் மின் குழுக்கள் அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை இலவசமாகச் செய்து கொடுத்திருக்கின்றன. மின் குழுக்களாகச் செயல்படும் போது, தங்களுக்கிடையிலான கருத்துகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியிலும் பல்வேறு மின் குழுக்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இந்த மின் குழுக்களின் வளர்ச்சியே இன்று முகநூல், சுட்டுரை போன்ற புகழ்பெற்ற சமூக வலைத்தளங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இந்தச் சமூக வலைத்தளங்களிலும் குழுக்கள் அமைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இணையக் குழுக்களைப் போல், இணையம் வழியில் மன்றங்களும் தொடங்க முடியும். இதன் மூலம் எளிதில் கலந்துரையாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இணைய மன்றங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றன. தமிழ் மொழியிலும் சில இணைய மன்றங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவைகள், தமிழ் வலைப்பதிவுகளில் செய்யப்பட்டும் பதிவுகளுக்கான கருத்துகளைப் பதிவு செய்யும் வகையிலேயே இருந்து கொண்டிருக்கின்றன.
திரு.செல்வமுரளி
தலைப்பு: தமிழ் குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள்
21 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளதுஇந்தத் தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும், கற்பிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் குறுஞ்செயலிகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட குறுஞ்செயலிகளை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதுவரை உள்ள குறுஞ்செயலிகளைவிட கற்றல் கற்பித்தலில் பல புதுமைகளைப் புகுத்தி உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு இங்குப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் முன்வரவேண்டும் என்றார்.
 நிறைவு விழாவில் முனைவர் சா.சேகர்,  (ஆட்சிமன்றகுழு உறுப்பினர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்.) இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரியைச் சார்ந்த 45 மேற்பட்ட பேராசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். பிறகு தனது உரையில் இங்குப் பயிற்சியில்  ஈடுபட்ட பேராசிரியர்கள் அவரவர் கல்லூரிக்குச் சென்று இங்கு நடந்த தமிழ் இணையப் பயன்பாடுகள் குறித்த செய்தியை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுங்கள். இதுபோன்ற பயிலரங்கை உங்களது கல்லூரியில்  நடத்துங்கள். அதற்குப் பயிற்சியாளராக முனைவர் துரை.மணிகண்டன் அவர்களை அழையுங்கள் என்றார்தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.






 பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்.



                                              குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Wednesday, February 1, 2017

ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம்

|3 comments
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த எமது தமிழ்த்துறைத் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் விரைவாக தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். மொத்தம் 50 பேராசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி. இதுவரை 25 பேராசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு ஒரு பேராசிரியர் என்பது இலக்கு. தொடர்பிற்கு - mkduraimani@gmail.com.