/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, March 14, 2020

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.


                       தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.




05,06 - 03- 2020 அன்று  இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பானது யாழ்ப்பாணத்தில் ”உலக இணையத்தமிழ் மற்றும் அதன் பயன்பாடுகள்- பயிலரங்கம்”  BCAS Campus தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் 05, 06 - 03 -2020 இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடத்தியது.   இப்பயிலரங்கில் பயிற்சியாளர்களாகப் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் இருவரும் பயிற்சி வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சி வழங்கினர்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவி ஒருவருக்குச் சான்றிதழ் வழங்குகிறார் பேராசிரியர் க.உமாராஜ், அருகில் திரு. மயூரநாதன், தமிழறிதம் தலைவர் திரு.நகுலேஸ்வரன், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன், திரு.ரசாக் அகமது.

முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாக மாணவர் ஒருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத் சிறப்புரையாக இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியை நாம் பயன்படுத்த வேண்டும் அதற்கு இந்த இரண்டு வளவாளார்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ளார்கள். அனைவரும் பயன்பெற வேண்டுகின்றேன் என்றார். அடுத்து தமிழ் அறிதநுட்பியல் உலகாயத்தின் (தமிழறிதம்) தலைவர் திரு.இ.நகுலேஸ்வர ராஜா அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பை பாரதிதாசன் மற்றும் பலரது கவிதைகள் மூலம் எடுத்துக்காட்டி இன்றைய தொழில்நுட்ப அறிவையும் எடுத்து விளக்கினார். தொடர்ச்சியாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனத்தின் செயலாளர் திரு சரவணபவானந்தன் அவர்கள் பயிலரங்க குறிக்கோள்களாக கருத்து வழங்கினார். அதில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அது தமிழ்மொழியின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இணையவழியே நம் மொழியை கொண்டு செல்ல வேண்டும் அதற்கு தமிழறிதம் அமைப்பானது முழுமையாக பாடுபடும் என்று கூறினார். மேலும் இலங்கையில் இதற்கு முன்னமே மூன்று பயிற்சிகளை (தமிழ் விக்கிப்பீடியா எழுதுவது தொடர்பாக) வழங்கியுள்ளதாகவும் இந்த அமைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 அமர்வின் தொடக்கமாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் வரலாறு குறித்தச் செய்திகளை எடுத்து வழங்கினார். அமெரிக்காவில் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட இணையம் பின் நாட்களில் ஆராய்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் இன்று மிக முக்கிய இடத்தைப் பிடித்து வளர்ந்து வந்துள்ளது. மேலும் இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடுகள் 1984 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்றும் அதற்காக  கலாநிதி சீனிவாசன், ஜார்ஜ்.எல்.ஹார்ட், முத்துநெடுமாறன், பாலாப்பிள்ளை போன்றோர்களின் பங்களிப்பையும்ம் எடுத்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் இணையம் வளர்வதற்கு உலகளாவிய அளவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்ட கருத்துரு குறித்தும் எடுத்துரைத்தார்.

அடுத்த அமர்வில் தமிழ்த்தட்டச்சு குறித்து விரிவான வரலாற்றைக் குறிப்பிட்டார். மேலும் எவ்வாறு தமிழ்த்தட்டச்சு செயலியை தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்வது என்று மாணவர்களுக்குப் பயிற்சியின் மூலம் காட்டினார்.  மாணவர்கள் அதனை உடனடியாக தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெற்றனர். தொடர்ந்து தமிழ் வலைப்பூக்களின் வரலாற்றையும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் முடிவாக ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவைத் தமிழில் உருவாக்கி தமிழில் தட்டச்சு செய்து செய்திகளை வெளியிட்டனர். 

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை எழுதுவது எப்படி என்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழ் முகப்பு பக்கத்தை உருவாக்கியவர் இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் என்றதும் அனைவரும் பரவசம் அடைந்தனர். திரு.மயூரநாதன் நிறைவுவிழாவிற்கு வருகை தருகிறார் என்றதும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  வலைப்பதிவை உருவாக்காத மாணவர்கள் அடுத்தநாள் பயிற்சியில் கலந்துகொள்ளும்போது அவரவர் ஒரு வலைப்பதிவை உருவாக்கி வரவேண்டும் என்று கூறினேன்.

முதல் நாள் நிகழ்வில் பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் அவர்கள் கணினி மொழியில் என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் இயந்திர மொழிபெயர்ப்பும், பேச்சுமொழித் தொழில்நுட்பம் குறித்து உரை வழங்கினார். இதில் பயிற்சியாக கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை விளக்கி அதனைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். பேச்சுத்தொழில் நுட்பத்தில் உரையிலிருந்து பேச்சுவழக்கிற்கும், பேச்சுவழக்கிலிருந்து உரை வழக்கிற்கும் இதுவரை கடந்துவந்த மென்பொருள்களின் பயன்பாடுகளை விளக்கினார்.


06-03-2020 அன்று அதன் தொடர்ச்சியாக காலை 9.30 மணிக்குப் பயிற்சி தொடங்கியது. பயிற்சித் தொடங்கிய உடனே முதல்நாள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் பயிற்சியில் வலைப்பதிவை உருவாக்காதவர்கள் வீட்டில்  வலைப்பூக்களை உருவாக்கி வந்திருந்தார்கள். அதில் தமிழில் தட்டச்சு செய்து தமிழ்ச்சாரல் வலைப்பதிவு திரட்டியில் இணைத்தும் வந்து காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பை பெறும் வழிகள் குறித்து விளக்கினேன். எவ்வாறு முகநூலில் சின்ன, சின்னப் படங்களை இணைத்து பணம் பெறுவது காணொளியில் எவ்வாறு புதிய காணொளி பக்கத்தை உருவாக்கி அதில் நல்ல செய்திகளை வெளியிட்டு நல்ல வருமானம் பெறுவது என்றும் பயிற்சி வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களை எவ்வாறு நாம் கையாள்வது என்பது பற்றியும் தெரிவித்தேன்.
                                      பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்

அடுத்து தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவதின் பயன்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூறினேன். பயிற்சியின் நிறைவாக மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இனி தமிழில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினர். அடுத்து பல புதிய காணொளிகளை உருவாக்கி யாழ்ப்பாணத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த தயாராகிவிட்டதாகவும் கூறினார்கள். அடுத்து இனி தகவல் தொழில்நுடபங்களைத் தமிழில்தான் பயன்படுத்துவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 நிறைவு விழாவில் தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தை உருவாக்கிய இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் அவர்கள் கலந்து மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார். அதில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டுமின்றி விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்கிப்பயணம், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள், விக்கிநூல்கள், பொதுவகம் போன்ற பல தலைப்புகளிலும் விக்கிப்பீடியா பயனளிக்கின்றது என்று விவரித்தார்.
திரு.மயூரநாதன் அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவருக்குச் சான்றிதழ் வழங்குதல்

நிகழ்வில் தமிழறிதம் நிறுவனத்தின் தலைவர் திரு.இ.நகுலேஸ்வரராஜா மற்றும் செயலாளர் திரு.சரவணபவானந்தன் உறுப்பினர்கள் யாழ்பாவாணன், தமிழறிதம்  பொருளார் திரு. க.விக்னேஸ்வரானந்தனும் நிகழ்வில் பங்கேற்றார்.


                       BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத் 



1 comments:

  • Yarlpavanan says:
    March 14, 2020 at 8:18 AM

    தங்கள் வருகையும் யாழ்ப்பாணப் பயநர்களுக்குத் தாங்கள் ஆற்றிய பணியும் பாராட்டத்தக்கது. தங்கள் தமிழறிவும் தொழில்நுட்ப அறிவும் சிறப்பு. அதனை நான் நேரில் கண்டு நிறைவடைந்தேன். தங்கள் பணி உலகெங்கும் பரவ வாழ்த்துகிறேன்.