/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 31, 2016

திருக்கோணமலை (இலங்கை) “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” சர்வதேச பயிற்சிப்பட்டறை- நிகழ்ச்சிகள்



கிழக்குமாகான கல்வி அமைச்சும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்தும் “ இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.






       கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து இலங்கை(கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச  “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச பயிற்சிப்பட்டறை 8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.

       நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது.
நிகழ்வில்  உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன்  வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.  மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில்  தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.



      இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய சி.தண்டாயுதபாணி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை தொடங்கிவைத்து இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட திருக்கோணமலை, கிண்ணியா, மூதூர் கல்வி வளையங்களைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் சுமார் 70 பேரிடம் இந்தப் பயிற்சியின் முழுமையானப் பயனைப்பெற்று அவர்களின் கல்வித்தரத்தையும் கற்றல் கற்பித்தலின் உத்திகளையும் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மேலும் இலங்கையில் உத்தமத்தின் பணிகளைப் பாராட்டி ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்.


      உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ஜெ.பிரதீபன் சிறப்புரையாற்றுகையில் தான் தமிழ் மொழியில் புலமையாளன் அல்ல, ஆனால் தொழில்நுட்பவியலில் தமிழ் நுட்பவியலிலுள்ள பிரச்சனைகளைத் தான் அறிந்திருப்பதாகவும் அதுபற்றிக் கருத்துக்கூற முடியுமென்றும் கூறினார். உலகில் பலமொழிகள் இருந்தாலும் அவற்றில் வளமான மொழி, வாழும்மொழி என இருவகை உண்டு. வளமான மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. அது இன்று வாழும்மொழியாக  இல்லை. ஆனால் தமிழ் மொழி வளமான மற்றும் வாழும்மொழியாக உள்ளது. ஆங்கிலம் வாழும் மொழியே அதனால் இன்று அதன் அதிகமானப் பயன்பாட்டால்  பல மொழிகள் வழக்கொழிந்து போகின்றன என சொல்லப்படுகிறது.
மொழியொன்று காலத்திற்கேற்ப யதார்த்தை ஏற்று, பொருத்துமானவற்றை ஏற்கும் பக்குவத்தின் அடிப்படையில் உள்வாங்க வேண்டும். அதுவே மொழியை வாழவைக்கும் என்றார். தமிழ் மொழியில்  247 எழுத்துக்கள் இருந்த போதிலும் அவ்வெழுத்துக்களை உருவாக்கும் எழுத்துருக்கள் (Symbols) மிக மிகக் குறைவு. எனவே ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் தமிழில் 247 எழுத்துக்களும் என்று கூறுவது தவறு. ஒரு வளமான வாழும் மொழி குறைந்தளவு எழுத்துக்களைக் கொண்டு கூடிய அளவு ஒலிவடிவம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் ஒலிவடிவம் 247 குறியீடுகளுக்கு அப்பால் எண்ணிலடங்கா ஒலிவடிவம் உண்டு. இது  தமிழ் மொழியின் சிறப்பாகும்.



      இலங்கை உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.சி. சரவணபவானந்தன் அவர்கள் உத்தமத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி உத்தமம் ஆற்றிய பணிகள் குறித்து தனது உரையில் பதிவுசெய்தார். மேலும் உத்தமத்தின் மூலம் இலங்கையில் பல்வேறு தொழில்நுட்ப செயல்பாடுகளை நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பயிற்சியில் கலந்துகொண்ட  ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.  உத்தமத்தில் மேலும் பல புலமையாளர்கள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ளார்கள். இவர்களைப் பயன்படுத்தி மேலும் பல தமிழ் இணையப் பயிலரங்குகள், கருத்தரங்குகள் கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்குப் வாய்ப்புள்ளதாகவும் அதற்கான அனுமதியை  வழங்குமாறும் அமைச்சர் அவர்களிடம் விரும்பி கேட்டுக்கொண்டார். மேலும் தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாட்டை அடுத்த சந்ததியினருக்குக் கடத்தவேண்டிய கட்டாயப் பொறுப்பு தங்களிடம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.




      அடுத்து உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி உத்தமம் தமிழ்க் கணிமைக்காற்றிய பங்கை எடுத்துரைத்தார். எனவே உத்தமத்தில் அனைவரும் உறுப்பினராக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கூறினார். தமிழ் எழுத்துக்களின் தரக்குறியீட்டைப் பற்றி எடுத்துரைத்தார்.



       முதல் நாள் நிகழ்வில் (8-11-2016)  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தில்  தமிழ் அறிமுகம் மற்றும் அதன் பயன்பாடு  என்ற தலைப்பில்  பயிலரங்கை நடத்தினார். தமிழ்க்கணினி இணையப்பயன்பாட்டின் வரலாற்றையும் தமிழ் எழுத்துருக்களினால் ஏற்பட்ட தமிழ்க் கணிமைக்கான தேக்க நிலையையும் எடுத்துக்கூறி அது வளர்முகமாக வளர்ந்த ஒருங்குறியின் பயன்பாட்டையும் தமிழ் வலைப்பக்கம் மற்றும் தமிழ் மின்னியல் நூலகத்தின் பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.  வலைப்பதிவினை உருவாக்கி அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் இதுபோன்ற பயிற்சியை வழங்கி அவர்களின் தொழில்நுட்ப சிந்தனை வளர்க்க வேண்டும் என்றார்.


      தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சி நிலையினையும் மென்தமிழ் சொல்லாளர்,  பொன்மொழி, நாவி சந்திப்பிழைத் திருத்தி போன்றவையும் தமிழ் OCR குறித்தும் அதன் இன்றையத் தேவையையும் வலியுறுத்தினார். தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுங்கள் அதற்குப் பயிற்சி வழங்க இலங்கையைச் சார்ந்த திரு மயூரநாதன் அவர்களை அழைத்துப் பேசுங்கள் என்றார்.


பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம் நீங்களும் இது போன்ற பயிற்சியினை இலங்கையில் ஏனைய பகுதியில் இது குறித்து விவாதம் செய்யுங்கள். அது தமிழ் தொழில்நுட்பவியலுக்கு நல்ல வளர்முகமாக இருக்கும் என்றார். இலங்கை மற்றும் தமிழகத்தின் கூட்டுமுயற்சியால் ஒரு கணினி கலைச்சொல்லாக்கம் ஒன்றை உத்தமம் உருவாக்க முன்வரவேண்டும் என்றார்.
இறுதியாக பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். எந்த மென்பொருள்களையும் இலவசமாக பெற முன்வராதிர்கள். முடிந்தளவு பணம் கொடுத்து அதனைப் பெற்றுக்கொண்டு  பயன்படுத்துங்கள் என்றார்.


       மதியம் 2 மணிக்கு MICRO SOFT OFFICE தமிழின் இடைமுகம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவர் திரு.சு.ஹரிகரகணபதி அவர்கள் பயிற்சியை வழங்கினார். அவர் வேர்டில் தமிழ் இடைமுகம் பற்றியும் கணிப்பொறியை இயக்கும் போது எழும் தொழில்நுட்ப சிக்கலையும் அதனைப் போக்கும் வழிமுறைகளையும் எடுத்து தெளிந்த தமிழில் வழங்கினார்.  மேலும் சில அடிப்படைக் கணிப்பொறி அறிவினையும் எடுத்து வழங்கினார். பயிற்சியில் ஆசிரியர்கள்  முன் வைக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினார்.


        பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் (இலங்கை) திரு. சி. சரவணபவானந்தன் அவர்களிடம் கொடுத்து  கணினியில் தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக  மின்னஞ்சல் ஊடாக கலந்துரையாடும்படி கேட்டுக்கொண்டார்.(www.infitt.org, sarabavan2005@gmail.com)


         09-11-2016 அடுத்த நாள் அமர்வில் காலை உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு செல்வமுரளி அவர்கள் செல்பேசிகளுக்கான குறுஞ்செயலிகளை உருவாக்குவது, குறுஞ்செயலிகளின் அடிப்படை, ஆன்டிராய்டு, ஐபோன், விண்டோஸ் ஆகிய திறன்பேசிகளுக்கு குறுஞ்செயலிகளை உருவாக்கி அதைஅதனதன் சந்தையில் எப்படி பதிவேற்றுவது ,போன்ற பயிற்சிகளை தகுந்த  மென்பொருள்களை கொண்டு  பயிற்சிகள் சிறப்புரை வழங்கினார். எவ்வாறு தமிழ்க் குறுஞ்செயலிகளை உருவாக்குவது என்றும் அதனால் பயன்படும் பயன்பாட்டாளர்களை
முன்வைத்துதான் குறுஞ்செயலி உருவாக்க வேண்டும் என்றார். பயிற்சியில் பங்குகொண்ட ஆசிரியர்கள் பலர் தமிழ்க் குறுஞ்செயலியை உருவாக்கி வெளியிட்டனர் இது தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்களையும் எடுத்து விளக்கினார்.


       மாலை அமர்வில் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ஜெ.பிரதீபன் நிரலாக்கம் (program)  வடிவமைப்பு பற்றிய தெளிவான விளக்கத்தினை வழங்கினார். எவ்வாறு எளிமையாக நிரலாக்கம் (program) எழுதவேண்டும் எனபதை பயிற்சி மூலம் ஆசிரியர்களுக்கு எடுத்து விளக்கினார்.

       நிகழ்வின் இறுதியாக கல்வி அமைச்சர் நிறைவுரையில் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி பாவனைக்கு வரவில்லையென்றால் தமிழ்மொழி வழக்கொழிந்துவிடும் என பேராசிரியர் மணிகண்டன் குறிப்பிட்டார். நான் யோசித்துப் பார்த்ததில் நமது மொழி 2500 ஆண்டுகள் பழமையான மொழியாக வளர்ந்து வந்துள்ளது அப்பொழுது ஏது தொழில்நுட்பம் இருந்தது? மொழி வளரவில்லையா என்றும் இன்றையக் காலக்கட்டத்தில் தமிழர்கள் உலகம் முழுவது வியாப்பித்திருப்பதால் மொழியின் கட்டமைப்பையும் பிறமொழியினால் ஏற்படும் தாக்கத்தையும் கடந்து செல்ல வேண்டுமென்றால் இன்று கட்டாயமாக தொழில்நுட்பங்களில் தமிழின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். இந்தப் பயிற்சியின் மூலம் கிடைத்த தரவுகளை மாணவ மாணவிகளுக்குக் கொண்டுசெல்லும் பணி உங்களிடம் இருக்க வேண்டும். மேலும் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் உத்தமத்தோடு இணைந்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


      நிகழ்வின் முடிவில் சி.சரவணபவான்ந்தன் குறிப்பிடுகையில் பங்குதாரர்கள்  தமிழ் தகவல் தொழில்நுட்பதில் தமிழ்ச்சொற்பதங்களில் ஒருசில சொற்பதங்கள் பொருத்தபாடு இல்லமால் இருப்பதைக் குறிப்பிட்டனர் என்றும் அதற்குத் தீர்வாக இலங்கை அரசகரும மொழித் திணக்களத்தால் தொகுக்குப்பட்டக் கலைச்சொல் தொகுதியை மீண்டும் இத்திணைக்களத்துடன் இணைந்து கலைச்சொல் தொகுதியை காலத்திற்கேற்ப புதிப்பிக்க உத்தமம் ஒரு நிகழ்ச்சி திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இறுதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொதுசன அலுவலர் திரு. வ.கலைச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.










12 comments:

  • Unknown says:
    November 1, 2016 at 3:43 AM

    கடல் கடந்து தமிழ் கணினி வளர்ச்சி. நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்

  • Yarlpavanan says:
    November 1, 2016 at 4:43 AM

    அருமையான தகவல் தொடருங்கள்

  • மணிவானதி says:
    November 1, 2016 at 6:10 AM

    மிக்க நன்றிங்க பிரேம்.

  • மணிவானதி says:
    November 1, 2016 at 6:13 AM

    மிக்க நன்றிங்க யாழ்பவனன்

  • Mohan says:
    November 1, 2016 at 7:44 AM

    அருமை

  • மணிவானதி says:
    November 1, 2016 at 10:34 AM

    நன்றிங்க ஐயா.

  • கல்விக்கோயில் says:
    November 1, 2016 at 11:04 AM

    நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்

  • மணிவானதி says:
    November 1, 2016 at 7:56 PM

    நன்றிங்க ஐயா.

  • திண்டுக்கல் தனபாலன் says:
    November 1, 2016 at 11:15 PM

    வாழ்த்துகள் அய்யா...

  • மணிவானதி says:
    November 2, 2016 at 6:29 AM

    நன்றிங்க ஐயா.

  • S.Lankeswaran says:
    November 10, 2016 at 7:31 AM

    தங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் ”எளிமையாய் எவ்வாறு பிறருடன் பழகுவது” என்பதை. நன்றி ஐயா.

  • மணிவானதி says:
    November 13, 2016 at 2:48 AM

    மிக்க நன்றி இலங்கேஸ்வரன். இதுபோன்ற பயிலரங்குகள் இன்னும் பல அங்கு நடத்த வேண்டும் அன்பரே.