/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, June 24, 2016

கட்செவி (வாட்சாப்- whats app)

|4 comments
கட்செவி (வாட்சாப்- whats app)

 “வாயிருந்த வாழச் சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க” என்பது முதுமொழி. அதைப்போல  ‘வாட்சப் இருந்த வாழச்சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க’  என்பது புது மொழி. இன்று அனைவரும் உச்சரிக்கும் இரண்டு மந்திரம் ஒன்று முகநூல், மற்றொன்று வாட்சப் என்ற .கட்செவி’ ஆகும்.
வாட்சாப் என்பது ஆன்லைனில் செய்திகளை இலவசமாக வழங்கும் ஒரு செயலி. இஃது அலைபேசிகளில் இருந்து செய்திகள், குறுஞ்செய்திகள், முழுப்படங்கள், புகைப்படங்கள்  என நண்பர்களுக்கு உடனுக்குடன் சுடச்சுட வழங்கும் ஒரு செயலியாகும். இது மேலும் நண்பர்கள் குழுவாக இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உதவும். சுறுக்கமாகச் சொன்னால் இன்றைய இளைய தலைமுறை,  இல்லை,  பழைய தலைமுறையையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

வாட்சப் வரலாறு
ஜேன் கோம்,(JAN KOUM) பிரையன் ஆக்டன் (BRIAN ACTON) இருவரும் வாட்சபின் நிறுவனர்கள். ஜேன் கோம், உக்கரைன் நாட்டைச் சார்ந்தவர். அந்நாட்டில் வறுமையில் பிறந்தவர் சொந்த நாட்டில் வாழத் தகுதியில்லாமல் தனது பதினாறாவதுவயதில் அமெரிக்காவின்  கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்திற்கு தனது தாயுடன் வந்தவர். அமெரிக்க அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக காத்திருந்து உணவை வாங்கிப் பங்கிட்டு உண்டுள்ளனர். அந்த அளவிற்கு வறுமையின் பிடியில் இருந்தவர் ஜேன் கோம்.
 கோமுக்கு தனது பத்தொன்பதாவது வயதில் சொந்தமாக ஒரு கணிப்பொறிக் கிடைத்துள்ளது. அதோடு இணைய இணைப்பும் கிடைத்துள்ளது. கோம் எந்நேரம் கணினி, இணையம்தான். இவர் தொடக்கத்தில் இணைய உலகில் ஹேக்கிங்கில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும் ஹேக்கிங் குழுவுடன் இணைந்து பணியாற்ற தொடங்குகிறார். பிறகு பெரிய நிறுவனங்கள் இவரது ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு நாட ஆரம்பித்தன. (குறிப்பு- ஹேக்கிங் என்பது இதுவரை கெட்டதற்கு என்று இக்கட்டுரையைப் படிக்கும் வரை நினைத்தேன். இல்லை பெரிய நிறுவனங்களுக்கு இது  பல நன்மைகள் செய்கின்ற ஒரு தொழில்நுட்பம் என்பதை உணர்ந்தேன்.) எர்னஸ்ட்  & யங் என்ற நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையில் பணியாற்றிக் கொண்டே கல்லூரியில் கணினி அறிவியலை படித்து வந்துள்ளார். பிறகு யாஹூ நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஃபைல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தபோது தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு பணியில் சேர்கிறார்.

இங்குதான் நண்பரும் வாட்சாப் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பிரையன் ஆக்டனைச் சந்திக்கின்றார். 1996 இருவரும் சந்தித்துக்கொள்ள நட்பு மலர்கிறது. இருவரும் இணை பிரியாத வாட்சாப் நண்பர்களாகின்றனர். பிரைன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஸ்டாண் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றியவர்..

ஜேன் கோம், எர்னஸ்ட் யங் கில் பணியாற்றியபோதே அவர் யாஹூ நிறுவனத்திற்கு வருவது தொடர்பாக பிரையன் சந்திக்கிறார். அப்பொழுது கோமுடை புத்திக்கூர்மையும் நேர்மையும் ஆக்டனைக் கவர்கிறது. இருவரும் அடிக்கடிச் சந்திக்கின்றனர். பின்பு ஆக்டைன் 1996 ல் யாஹூ நிறுவனத்திற்குப் பணிக்கு வருகிறார்.
ஆக்டைன் பணியில்சேர்ந்த நாள்முதல் இருவரும் இரட்டையர்களாக வளம் வந்தனர். 2007 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே யாஹூ நிறுவனத்திலிருந்து வெளியேறுகின்றனர். பிறகு இருவரும் தென் அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்.

வாட்சாப் பிறந்தது
 இருவரும் முகநூல் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்து காத்திருந்தனர். ..ஏனோ இருவரையும் முகநூல் நிறுவனம் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மனம் தளராமல் இருவரும் இருந்துள்ளனர். ஏற்கனவே யாஹூவில் வாங்கி ஊதியம் மெல்ல மெல்ல செலவாகத் தொடங்கியது. இப்படி இருக்கும் போது ஒருநாள் ஜனவரி 2009 -ல் நண்பர் வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஆக்டைனுடன் பல நண்பர்களும் உடன் இருந்துள்ளனர்.  அவர்கள் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அலைபேசியிலிருந்து செய்தியை அனுப்பும்போது சில தொழில்நுட்பப் பற்றாக்குறை இருப்பதை ஊகிக்கின்றார் கோம். மேலும் அன்றையச் சூழலில் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் பணம் செலவளிக்க வேண்டி இருந்தது.  ‘இணையத்தில் மெயில் பார்க்க  இணையம் வசதி இருந்தால் போதும். ஏன் அதனைப் பயன்படுத்தி காசு இல்லாமல் செய்தி அனுப்பும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம்’ கோமுக்கு சட்டென்று தோன்றுகிறது. இது தொடர்பாக நண்பர் ஆக்டைனிடம் பேசுகிறார். பிறகு இருவரும் கலந்து ஆலோசித்து  வேறு சில இணைய வடிவமைப்பாளர்களுடன் இது தொடர்பாக பேசுகின்றனர். அப்பொழுது தான் புதியதாக உருவாக்க இருக்கும் குறுஞ்செயலிக்கு (application) வாட்சாப்( கட்செவி- whatsapp) என்று கோம் பெயரிடுகிறார். யாராவது இருவர் அல்லது மூவர் பேசும்போது அப்புறம் என்ன என்று கேட்போம் அல்லவா? அதைதான் whats app என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

ஜேன் கோம் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்சாப்  நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் வாட்சாப் சரிவர இயங்கவில்லை. பயணர்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை. பலர் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் முறை இருக்க இது எதற்கு என்று பலர் நினைத்தனர்.

இதனால் இருவரும் இதை விட்டுவிட்டு மீண்டும் வேறு பணிக்குச் செல்லலாமா? என்று  யோசித்த கோம் இதுபற்றி ஆக்டனிடம் கேட்க ஆக்டையன் பொறுமையாக இருப்போம். இஃது ஒரு பெரிய நிறுவனமாக வளரும் என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். நண்பனின் பேச்சிற்கு மறுப்புக் கூறாமல் கோம் அமைதி காத்தார்.
இதற்கிடையில் கோம், ஆக்டையன் இருவரும் டிவிட்டரில் வேலைக்குச் சேர விண்ணப்பம் போட்டனர். பலனில்லை. அந்த நிறுவனம் இருவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் தாம் உருவாக்கிய வாட்சப் செயலியில் இருக்கும் குறைகளை அவ்வப்போது மேன்மைப்படுத்திக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆப்பிள் பயனாளிகள் பலர் இந்த வாட்சாப் செயலியைப் தங்களது அலைபேசியில் தரவிறக்கம் செய்யத் தொடங்கினர். இரவும் பகலும் வாட்சாப்பில் செய்தியை அனுப்பியவாறு இருந்தனர்.  சில நாட்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்சாப் பயனாளிகளனார்கள். மேலும் பல நண்பர்களிடம் இது தொடர்பாக பேசி ஒருகோடி ரூபாய் திரட்டி நிறுவனத்தை பெரிய அளவில் செயல்பட முனைந்தனர். தற்பொழுது ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெரி அலைபேசிகளுக்கும்  வாடசாப் வசதியை நீட்டித்தனர். பலன் பலர் தரவிறக்கம் செய்யத் தொடங்கினார்கள். தற்பொழுது வாட்சாப் சாதிக்கத் தொடங்கிவிட்டது எனலாம்.

பயன்பாடு
2009 ல் தொடங்கப்பட்ட வாட்சாப் செயலியில்  இன்று ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லட்சம் பேர் புதிதாக  இணைகிறார்கள். நாளொன்றுக்கு 4000 கோடி புகைப்படங்கள் பரிமாற்றம் நடைபெறுகிறது. நம்பமுடியாத கணக்காக இருக்கலாம். இதுதான் இன்றைய உண்மை. வாட்சாப்பின் பயன்பாடு பிப்ரவரி 2013 ல் 200 மில்லையன், டிசம்பர் 2013 ல் 400 மில்லியன், 2014 ல் 600 மில்லியன்,  ஏப்ரல் 2015 ல் 800 மில்லியன், பிப்ரவரி 2016 ல் 900 மில்லியன்   நூல் ஆச்சாகும் தேதிவரை( ஜூலை 2016 வரை ) சுமார் 1000 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்குகிறது.
வாட்சாப்பில் குழு உருவாக்கி அக்குழுவில் கலந்துரையாடும் ஒரு செயல்பாட்டை வெளியிட்டது தொடக்கத்தில் இக்குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. பின்பு 100. அடுத்து 125 என இருந்தது தற்பொழுது 256 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைத்து உரையாடலாம்  என்று வாட்சாப் அறிவித்திருக்கிறது. வாட்சாப்பும் கணினியில் இன்று இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகு சிறப்பு வாய்ந்த வாட்சப் நிறுவனத்தை முகநூல் நிறுவனம் பிப்ரவரி 2014 லில் 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. (நமது பணத்திற்கு சுமார் 99,584 கோடிக்கு “ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடிக்கு” விலை கொடுத்து வாங்கியுள்ளது.)

இத்தகு சிறப்பு வாய்ந்த வாட்சாப் நிறுவனத்தை முகநூல் வாங்கியிருந்தாலும் தற்பொழுது வாட்சாப் நிறுவனத்தினைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோம், பிரையன் ஆக்டன் இருவரும்தான். கோம் வாட்சாப் தொடர்பான மென்பொருளைக் கவனித்துக் கொள்கிறார். ஆக்டன் தொழில் தொடர்பானவையைப் பார்த்துக் கொள்கிறார். பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல் இதுதான் No Ads! No Games! No Gimmicks! என்பதுதான் வாட்சாப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சொன்ன தாரக மந்திரம் இதுதான் “ சிலிக்கான் பள்ளத்தாக்கில்  எங்கள் வாட்சாப் நிறுவனத்தைப் போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட  எங்களது அவ்வப்போதைய வெற்றியை  தக்கவைத்துக் கோள்ளவே நாங்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டால்,அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப் படுத்திக் கொண்டு எங்களை பின்னணியில் மறைத்துக்  கொள்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறெந்த தொழில் ரகசியமும் இல்லை என்கிறார்கள் இருவரும். தற்பொழுது குழந்தைகள் பயன்படுத்தும் விதமாக வாட்சாப்பை கொண்டுவரும் முயற்சியில் இருவரும் முனைப்புடன் செயல்படுகிறார்கள். ஏன் நம் நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் இவர்களைப் போல உருவாகக் கூடாது. காலம் வெகுவிரைவில் இதற்குப் பதில் சொல்லும்.






Wednesday, June 15, 2016

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு – கட்டுரை வழங்குதல் பற்றிய அறிவிப்பு

|2 comments
15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016
மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15வது) உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 செப்டம்லர் 9,10,11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2016 மாநாட்டிற்கு “”கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்” என்பது முதன்மைத் தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
•     இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி..) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…
•     ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
•     கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
•     திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
•     தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையினை  A4 தாள் அளவில் ஒரு  பக்கத்திற்குள் ஜூன் 22 தேதிக்குள்cpc2016@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கொண்டிருக்க வேண்டும். 
சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை பற்றிய இது போன்ற கருத்துக்களை மாநாட்டுக் குழு, தங்களுக்கு அனுப்பி வைக்கும். புதிய கருத்து, சிந்தனை கொண்ட கட்டுரைகள் படிக்கவும் (oral presentation), பிற கட்டுரைகள் சுவரொட்டி விளக்கங்களாகவும் (poster presentation) ஒப்புக்கொள்ளப்படும்.
கட்டுரையைத் தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு ஜுலை 15-ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.
முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு (ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.

முக்கியமான நாட்கள்

முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : ஜூன் 22
தேர்வு செய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : ஜுலை 15
திருத்தப்பெற்ற முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : ஜுலை 31
மாநாடு நடைபெறும் நாட்கள் : 2016 செப்டம்பர் 9,10,11
தமிழ் இணைய மாநாடு 2016இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2016@infitt.org என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.