/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 18, 2010

|0 comments
|0 comments
|0 comments
|0 comments

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

|3 comments
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்


முனைவர். துரை. மணிகண்டன்.

உதவிப் பேராசியர், தமிழ்த்துறை,

டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி)

இலால்குடி, திருச்சிராப்பள்ளி.

மின்னஞ்சல்: mkduraimani@gmail.com

___________________________________________________________

முன்னுரை

21ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இட்தைப் பெற்றிருப்பது இணையமாகும்.தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம், அறிவியல்,கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்குப் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப்பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு ’வலைப்பூக்கள்’ என்ற புதிய இலக்கிய வகை தோன்றி பெரும் பங்காற்றிவருகிறது.வலைப்பூக்கள் என்றால் என்ன?அதன் தோற்றம், தமிழில் தோன்றிய வரலாறு,மற்றும் அதன் வகைகளாக இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள்,பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம், பல்சுவைச் சார்ந்த வலைப்பூக்கள் என பகுக்கப்பட்டு ஒவ்வொன்றின் தமிழ் பயன்பாட்டையும் எடுத்து விளக்க இக்கட்டுரை விளைகிறது.

வலைப்பூ

ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழைந்தைசாமி அவர்களின் கூற்றின்படி நாம் இன்றையப் பணியை இன்றைய கருவிக்கொண்டு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகைத்தோன்றியுள்ளன. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (Webblog) என்பதாகும். 17-12-1997-ல் ஜார்ன் பெர்கர் (John Barger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரை பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது.

தமிழ் வலைப்பூ

இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வலைப்பூ சேவை

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை அமைக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூக்ளி (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது.

முதல் தமிழ் வலைப்பூ

தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி

தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் க.துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும்.

தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகள் வளர்ச்சியும்

தமிழ் வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு முக்கியமான சில தலைப்புகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தலாம்.

1. தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் வலையேற்றம் செய்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக கவினுலகம் என்னும் வலைப்பூ முனைவர் நா. கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வலைப்பூவில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் கட்டுரை வடிவிலும், கருத்துரையின் மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. (www.emadal.blogspot.com)

2. இந்தக் கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர். மானிடன் என்ற பெயரில் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் மு. பழநியப்பன். அவர்களால் இவ்வலைப்பூ 25.04.06-ல் உருவாக்கப்பட்டது. இவ்வலைப்பூவில் அதிக அளவில் கவிதைகளும் கட்டுரைகளும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பரிமாணங்களைத் தனக்கே உரிய புதிய சிந்தனைகளுடன் இங்கு பதிவேற்றம் செய்துள்ளார். (www.manidar.blogspot.com) மு இளங்கோவன் என்ற பெயரில் ஒரு வலைப்பூ 1.5.2007 முதல் இயங்கி வருகிறது.பேராசிரியர் மு.இளங்கோவனால் வெளியிடப்படுகிறது. இதில் 300 இடுகைகள் வரை இடம் பெற்றுள்ளன. இவர் நாள்தோறும் புதிய புதிய இடுகைகளைப் பதிவேற்றம் செய்த வண்ணம் உள்ளார். இவரது கட்டுரைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததும் தெளிந்த நடையுடையதுமாக அமைந்துள்ளன. இவ்வலைப்பூவிலிருந்து பிற வலைதளங்களுக்குச் செல்லும் இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு பழம்பெரும் இலக்கியவாதிகளின் தொகுப்புகள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. (mwww.mvelangovan.blogspot.com)

3. ஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம் மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர். கந்தர் அலங்காரம் என்ற பெயரில் கண்ணதாசன் மற்றும் ரவிசங்கர் என்பவர்களால் 2005-ல் தொங்கப்பட்ட இவ்வலைப்பூ உலக்த தமிழர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டதாகும். இந்த வலைப்பூ தவிர இந்து மதத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக திருப்பள்ளியெழுச்சி என்று மற்றொரு வலைப்பூவையும் இவர் உருவாக்கியுள்ளார். முருகப் பெருமானின் புகைப்படங்கள், பெருமைகள், விஷ்ணு பகவான் குறித்த பல செய்திகளும் சுப்ரபாதம், தோத்திரங்கள் என்று பக்தியின் உயர்வு நிலையைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. (www.murugaperuman.blogspot.com)

4. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவைகளில் சில மென்பொருட்கள் ஏப்ரல் 2005 முதல் தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழில் கணிப்பொறியை எவ்வாறு இயக்குவது, தமிழ் மென்பொருட்களின் பட்டியல்கள், என பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் உள்ளன. கணினி, இணையம் பற்றிய சில செய்திகளும் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ளன. (www.tamiltools.blogspot.com)

5. விண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.

குருவிகள் என்ற பெயரில் ஜுலை 2003லிருந்து தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகளும், புகைப்படங்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளன. இந்த வலைப்பதிவர் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. தமிழ் சினிமா செய்திகள் அவை குறித்த விமர்சனங்கள், நகைச்சுவை, அரிய புகைப்படங்கள் எனும் பார்வையிலான செய்திகளுடன் பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.

மருத்துவக் குறிப்புகள், மருந்துகள் அதைப் பயன்படுத்தும் முறைகள் என்று மருத்துவம் சார்ந்த சில வலைப்பூக்கள் தமிழில் உள்ளன. இந்த தமிழ் வலைப்பூக்களில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவங்களிலான வலைப்பூக்களே இருக்கின்றன. மூலிகை வளம் என்ற பெயரில் குப்புசாமி என்பவரால் 2007-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பூவில் பல மூலிகைச் செடிகள் குறித்தும் அவற்றின் தாவரப் பெயர், தாவரக் குடும்பம், வழக்கத்திலிருக்கும் அதற்கான வேறு பெயர்கள், பயன் தரும் பாகங்கள் போன்றவைகளைப் புகைப்படத்துடன் தந்துள்ளார். இவை தவிர பல நோய்களுக்கு மூலிகை மருந்துகள் குறித்த தகவல்களும் கொடுத்திருப்பது நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. (wwwww.mooligaivazam-kuppusamy.blogspot.com)

6. பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற ஒரு சில பெண்களுக்கான சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.

சாதனைப் பெண்கள் என்ற பெயரில் ஜெர்மனியிலிருக்கும் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரால் உருவாக்கப்பட்ட சில வலைப்பூக்களில் இதுவும் ஒன்று. இந்த வலைப்பூவில் பல அச்சிததழ்களில் வெளியான சில முக்கியப் பெண்மணிகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.. (www.vippenn.blogspot.com)

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

I. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.

II. தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெறுகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.

III. வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் மிக விரைவாக கிடக்கின்றன.

IV. இலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது.

V. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களானா சங்க இலக்கியம் முதல்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவருகிறது.

VI. இவைகள் அன்றி கணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன.

அறிவியல், விஞ்ஞாணக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றது.

VII. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன்.

VIII. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன. இதனால் தமிழ் ஆய்விற்குப் பல வழிகளில் பயன்படுகின்றன.

IX. வலைப்பூவினால் தொழில் நுட்ப வளர்ச்சிச் பெற்றுத் தமிழ்மொழி வளர்ந்து வருகின்றது.

X. வலைப்பூகளில் வெளிவரும் படைப்புகளும், கட்டுரைகளும், கவிதைகளும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத் தன்னால் இயன்ற பனிகளையும் செய்து வருகின்றனர்.

முடிவுரை

எப்படி இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்கின்றோமோ அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுக காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்.புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. iஇதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு அளப்பரியாத் தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.

.நன்றி.